ஐயை.
பெண் உடலில் மென்மையானவள். உள்ளத்தில் வன்மை யானவள். உணர்விலோ ஆழமும் அகற்சியும்
கொண்டவள். பல்லாயிரம் எண்ணக்கால்கள் அவள் உள்ளத்தில் ஊன்றியுள்ளன; அவற்றிற்குச் சிறகுகள் உண்டு; வல்லமை உண்டு. அவ்வெண்ணங்கள் ஒன்றிலும் ஊன்றாமலிருக்கும் வரை, அவளை நிலைப்படுத்த எவராலும் இயலாது. ஒன்றில் ஊன்றி விட்டாலோ அவற்றைச் சிறிதே பெயர்க்கவும் எவராலும் முடியாது! எத்துணைத்துயர் வந்தாலும் அவள் அந்நிலையினின்றும் விலகவே மாட்டாள்!
பெண்ணின் உள்ளம் மற்றொரு பெண்ணாலும் அறியப்
படாத கடலடி; மலைமுகரே அகன்று விரிந்த வானம்! அப்படிப்பட்ட பெண்மை நிரம்பிய அந்த நெஞ்சம், தான் விரும்பிய ஓர் ஆணின் உள்ளத்தில் காலூன்றி விட்டாலோ, அங்கேயே அது நுசர்கின்றத: பசி தணிகின்றது; நிறைவடைகின்றது; அயர்கின்றது. இறுதியில் துறக்கத்தையும் அமைத்துக் கொள்ளு கின்றது.
ஒருவித்து பூவாக மலர்ந்து, காயாக முதிர்ந்து, கனியாக நிறைவுறுதல்போல், ஒரு பெண் பேதையாய் விளங்கிப் பெண்மையாய்ச் சமைந்து, தாய்மையாய் நிறைவடைகின்றாள்!
இம்முப்பருவங்களும் ஒருபெண்ணின் மூன்று வாழ்க்கைகள். இம்மூன்று வாழ்க்கை நிலைகளிலும் அவள் உளத் தாலும், உருவத்தாலும் ஒவ்வொரு படி உயர்ந்து விளங்குகின்றாள்.
முதல் பருவத்தில் அவளுக்கு அவளே விளங்காதவள்;
இரண்டாம் பருவத்தில் அவளுக்குப் பிறர் விளங்காதவர்!
மூன்றாம் பருவத்தில் பிறர்க்கு அவள் விளங்காதவள்; இம் மூன்று பருவங்களும் பெண்மை என்ற பொன்னிழையில் கோத்த மூன்று முத்துகள்!
இவை ஒவ்வொன்றும் தனித்தனி அழகு வாய்ந்தவை;
உறுதி நிறைந்தவை. இவை எந்த ஓர் ஆணினாலும்
விலை மதிப்பிட முடியாதவை.
கற்பனைக் கண்களால் கலைச் சிறகமைத்து அவற்றை நாம் காண முடிந்தால்..!
ஆ! அவற்றின் பொலியும் வலியுந்தாம் என்னே!
ஐயை ஒரு பாவியம் மட்டும் அன்று: பேதைப் பெண் ஒருத்தி யின் உள்ள ஓவியம்! அதில் அருவியின் சிலிர் சிலிர்ப்பையும் பார்க்கலாம்; தென்றலின் குளிர்மை யையும் நுகரலாம்; எரிமலையின் சீற்றத்தையும் காணலாம்.
என் இரண்டுமாதச் சிறை வாழ்க்கையின் ஊடே மலர்ந்து மணம் பரப்பியவள் இந்த ஐயை!
எங்கேனும் ஐயையைப்போன்ற பெண் ஒருத்தியை நீங்கள் காண நேர்ந்தால், அவள் உள்ளத்தை வாழ்வெலாம் தொழுது போற்றிக் கொண்டிருங்கள். அந்தப் பெண்மை உள்ளத்திற்கு இந்த வானமும் எளியது; புடவியும் சிறியது! எங்கோ மலர்ந்து' எவர் கண்களுக்கும் படாமல் மணம்
பரப்பிக் கொண்டிருக்கும் அத்தகைய உள்ளங்களால்
தான் இவ்வுலகம் தன் நிலை பிரழாது சுழன்று கொண்டுள்ளது.
ஐயையை முழுவதும் உணர்ந்தால் நீங்களும் அவ்வாறு தான் கருதுவீர்கள்! அதன்பின் உங்கள உள்ளத்தில் ஒரு புதிய ஒளி பிறக்கும்; ஒரு புதிய வழி விளங்கும்.
அவ்வொளியும் வழியும் உங்கள் வாழ்க்கைப் பயணத்திற்கு ஓர் அமைதியையும், தெளிவையும் தருமானால் அதுவே ஐயையை நான் கண்டு காட்டியதற்குப் பயனும் பரிசும் ஆகும்.
மேலோட்டமும் ஆரவாரமும் நிறைந்த இக்கால வாழ்வின் பிடிப்புகளிலிருந்து, சற்றே உங்கட்குத் தொலைவான, ஆழமான ஓர் உண்மை உள்ளத்தின் நெளிவு சுழிவு களைக் காட்டியிருக்கின்றேன்.
அவற்றைக்கண்டு, காய்ந்து கிடக்கும் மனத்தின் போலிச் சருகுகளை உதிர்த்து விடுங்கள்! அவை ஒன்றுக்கும் உதவாதவை: உங்கட்கும் சுமையானவை!
ஐயை அத்துறையில் எல்லார்க்கும்-குறிப்பாகப் பெண்கள் எல்லார்க்கும் வழி காட்டியாக விளங்கட்டும்!
ஐயா பெருஞ்சித்திரனார்
Comments
Post a Comment